முதுகுளத்தூரில் போலீஸ், வழக்கறிஞர் மோதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் போலீஸ்காரருக்கும், வழக்கறிஞருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து,வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர் அருகில் உள்ள புளியங்குடி ஊராட்சி ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள தர்மருக்கும், ஊராட்சிஒன்றிய முன்னாள் தமாகா கவுன்சிலருக்கும் முன்பே முன் விரோதம் இருந்தது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் 21 பேர் காயமடைந்தனர். இதனால் இரு தரப்பினரையும்முதுகுளத்தூர் போலீசார் கைது செய்தனர். இதில் தர்மர் தரப்பினர் ஜாமீனில் விடுதலையாகினர்.
நீதிமன்ற ஆணைப்படி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இவர்கள் தினம் கையெழுத்திட்டு வந்தனர். ஆனால் சிலநாட்களாக இவர்கள் கையெழுத்திட வராததால், தலைமைக் காவலர் கருப்பையா அவர்களை கண்டித்துள்ளார்.
உடனே அவர்கள் இதுபற்றி அவர்களது வழக்கறிஞர் ராஜசேகரனிடம் தெரிவித்ததால், கருப்பையாவுக்கும்,ராஜசேகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் பஸ் நிலையத்தில் மோதிக்கொண்டனர். இதனால் ராஜசேகரனை போலீசார் கைது செய்தனர்.இதுபற்றிய தவலறிந்த வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு சென்று ராஜசேகரனை விடுவிக்குமாறு கூறியதற்கு,போலீசார் மறுத்துவிட்டனர்.
உடனே வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது.பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று வழக்கறிஞர்களை சமாதானப் படுத்தினர்.
பின்னர் கருப்பையா, ராஜசேகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் ஜாமீனில்விடுவித்தனர். ஆனால் தலைமைக் காவலர் கருப்பையா தலைமறைவாகிவிட்டார்.