தமிழகத்தின் புதிய ஆளுநர் ராம்மோகன் ராவ்
டெல்லி:
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான பி.எஸ். ராமமோகன் ராவ் இன்று(செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ராமமோகன் ராவ், உடனடியாகத் தமிழகம்விரைகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவை முதல்வர் பதவி வகிக்க அழைத்ததாகப் புகார் கூறப்பட்ட பாத்திமாபீவி, தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜனே தமிழக ஆளுநராகக் கூடுதல் பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையே தமிழகத்திற்கு விரைவில் புதிய முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக்கடிதம் எழுதப் போவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ராமமோகன் ராவ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் இடைக்காலப் பதவி வகிப்பவரும் ரங்கராஜனும் ஆந்திர ஆளுநர்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னையில் படித்தவர் ராவ்:
தமிழகத்தின் புதிய ஆளுநரான ராம்மோகன் ராவ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் (முதுகலை)படித்தவர்.
67 வயதாகும் ராமமோகன் ராவ், 1956ம் ஆண்டிலேயே ஆந்திராவில் போலீஸ் பணியில் சேர்ந்துவிட்டார்.
பின்னர் இன்டலிஜென்ஸ் பியூரோவில் 13 ஆண்டுகளும், 1960, "70களில் தெற்கு மத்திய ரயில்வேயில் தலைமைப்பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் ராமமோகன் ராவ்.
பின்னர் 1979 பிப்ரவரியில் ஆந்திர உளவுத் துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் 1986 மே மாதம்அம்மாநிலத்தின் டி.ஜி.பியாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஜனாதிபதி மெடல் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள ராமமோகன் ராவ், டி.ஜி.பியாக இருந்தபோது, ஆந்திரநக்சலைட்டுகளான மக்கள் போர்க் குழுவினரை அடக்கியதில் பெரும் பங்கு வகித்தார்.
கடந்த 1993ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பின், முழுக்க முழுக்க சொந்த பிசினசில் இறங்கி விட்டார் ராமமோகன்ராவ். இந்தியத் தொழில் சம்மேளனத்தின் (சி.ஐ.ஐ.) ஆந்திர மாநிலத் தலைவராக இருந்தார் இவர்.
விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட ராமமோகன் ராவ், 1986 முதல் 1992 வரை ஹைதராபாத் கிரிக்கெட்சங்கத்தின் தலைவராக இருந்தார்.