சென்னை ஒருநாள் கிரிக்கெட்: கும்ப்ளே கேப்டன்
சென்னை:
இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலிக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை அனில் கும்ப்ளே வழிநடத்திச்செல்வார்.
இன்று பிற்பகல் தொடங்கும் இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி, பகலிரவுபோட்டியாக நடைபெறும்.
நேற்று நடந்த பயிற்சியில் கங்குலி பந்து வீச முயன்றபோது, அவருடைய கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
மேலும் பந்து வீசவோ, மட்டை பிடித்து ஆடவோ அவருக்குச் சிரமமாக இருக்கும். தொடர்ந்து சிகிச்சைமேற்கொண்டுள்ள அவர் இன்று நடக்கும் போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டார்.
இதையடுத்து சென்னையில் இன்று காலை கூடிய தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கங்குலிக்குப் பதிலாக கும்ப்ளேயைகேப்டனாக்க முடிவு செய்தனர்.
கங்குலி இந்தப் போட்டியில் விளையாடாததையடுத்து, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கருடன் துவக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவக் களம் இறங்கவுள்ளார்.
மெரீனா கடற்கரையில் கண்காணிப்பு காமிராக்கள்:
இந்நிலையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் மட்டுமல்லாமல்சென்னை மாநகரம் முழுவதுமே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் மட்டும் சுமார் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேடியம் முழுவதும் மெட்டல்டிடெக்டர்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
மெரீனா கடற்கரை அருகே உள்ள கடற்கரைச் சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications