பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.15 கோடி ஊழல்
சென்னை:
தமிழக அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.15 கோடி அளவில் மோசடிநடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் வந்துள்ளதையடுத்து 5 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
மேலும் இந்தியாவின் முன்னணி கப்பல் உரிமையாளர்கள் 17 பேரிடம் விசாரணை நடத்தவும் சிறப்புப் படைகள்விரைந்துள்ளன.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொண்டுவரப்பட்டுவருகிறது.
ஆனால், இந்த நிலக்கரி இறக்குமதியில் கடந்த 1994-95ம் ஆண்டில் மாபெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகலஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து இந்நிறுவனத்தின் பொது மேலாளர்கள் சிவசுப்பிரமணியம், கேப்டன் சுதாகர், மேலாளர் சிவலிங்கபிரசாத், அக்கவுண்ட்ஸ் மேலாளர் டில்லிகுமார் மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி மோகன் ஆகிய 5 அதிகாரிகளிடம்லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இவர்களில் சிவசுப்பிரமணியமும், சுதாகரும் ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டனர். சிவலிங்க பிரசாத் மற்றும்டில்லிகுமார் ஆகியோர் வேறு வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர். மோகன்மட்டும் தற்போது பணியில் உள்ளார்.
இவர்கள் சுமார் ரூ.15 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பதாகப் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இந்த 5 பேர் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.சென்னை மற்றும் மதுரையில் ஒரே நேரத்தில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களும், ரூ.25 லட்சம் பணமும், பல லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகப் போலீசார் கூறினர்.
விரைவில் அந்த 5 அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு கப்பல் உரிமையாளர்கள், அந்த நிறுவனத்தின்ஊழியர்களிடமும் விசாரணை நடத்த சிறப்புப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகள்மும்பை, கொல்கத்தா, சென்னையில் ஆகிய இடங்களில் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்.