இன்று ஜெ, ஸ்டாலினும் பிரச்சாரம்: ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
தேனி:
ஆண்டிப்பட்டியில் இன்று ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இரு தலைவர்களும் ஒரே நாளில் இந்த சிறிய ஊரில் பிரச்சாரம் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும் ஸ்டாலினும் இன்று மாலையில் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
இதையடுத்து இரு கட்சியினரின் நடமாட்டத்தையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இது ஸ்டாலின் மேற்கொண்டுள்ள 2ம் கட்ட பிரச்சாரமாகும். கடந்த சில தினங்களுக்கு முன் வந்திருந்து வைகைசேகரை ஆதரித்து முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 3 நாட்களாக கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் போகும் வழியில் முதல்வரும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் திமுகவினருக்கும்,அதிமுகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இந்த முறை ஜெயலலிதா இருக்கும் பக்கம் வர வேண்டாம் என ஏற்கனவே ஸ்டாலினிடம் போலீசார்கூறிவிட்டனர். இதையடுத்து அவர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வரும் இடங்களை விட்டுவிட்டு வேறுபகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டியில் உள்ள மேக்கிழார்பட்டியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்குகிறார்ஸ்டாலின்.
நாளை காலை 10 மணிக்கு குன்னூரில் இருந்து ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். பின்பு மாலை 6மணிக்கு ஜக்கம்பட்டியில் பிரச்சாரம் செய்கிறார்.
திமுக சட்டசபைத் தலைவர் அன்பழகனும் இன்று ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்கிறார்.
அழகிரி ஏற்கனவே தனது ஆட்களுடன் தனியே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications