அறுந்த நட்பு துளிர்க்கவே வைகோவை அழைத்தேன்: கருணாநிதி
சென்னை:
வைகோவுடன் நடுவில் அறுந்து விட்ட நட்பு துளிர்க்கலாமே என்ற நம்பிக்கையோடு நல்ல எண்ணத்துடன்தான் ஒருகருத்தைச் சொன்னேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மதிமுகவும், புதிய தமிழகமும் தேர்தல் போட்டியிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றுகருணாநிதி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு வைகோவும், கிருஷ்ணசாமியும், கருணாநிதியைகடுமையாக சாடி பேட்டியளித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நிருபர்கள் சிலர் அக்கறையுடன் என் சுற்றுப்பயணத்தின் போது ஒரு கேள்வி எழுப்பினர். இன்னும் சிலகட்சிகள் நிற்பதால் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள் சிதறி விடாதா? அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றுகேட்டனர்.
அப்போது நல்ல எண்ணத்துடன் ஒரு கருத்தை சொன்னேன். நடுவில் அறுந்து விட்ட நட்பு துளிர்க்கலாமே என்றநம்பிக்கையுடன் சொன்னேன். அதை ஏதோ தங்கள் செவியில் நாராசத்தை நான் பாய்ச்சி விட்டதுபோல்அக்கட்சிகளின் தலைவர்கள் என் மீது சீறி பாய்ந்து விட்டார்கள்.
குழப்புகிறார், பித்தலாட்டம் செய்கிறார், மண்டியிடச் சொல்கிறார், யாசகம் கேட்க வைக்கப் போகிறார் என்றெல்லாம்எனக்கு ஏகப்பட்ட அர்ச்சனைகள். நண்பர் கிருஷ்ணசாமியாவது பரவாயில்லை. அவர் கழகத்திலிருந்து நெடுநாட்களுக்கு முன்பே போய்விட்டவர்.
ஆனால் வைகோவின் மறுப்புதான் மழுவைக் காய்ச்சி நெஞ்சில் குத்துவது போல இருந்தது. அண்மையில் ஆறேழுவருடங்கள்தானே ஆயிற்று. குறுகிய இடைவெளி என்பதால் குத்தீட்டி போல் சொற்கள். அதையும் குற்றாலஅருவியாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.
வசைபாடுகிறவர்களை எண்ணும் போது அவர்கள் முன்பு வானளாவ வாழ்த்தியதையும், பாராட்டியதையும்நினைத்து இன்று பாடும் வசையை மறந்து விடுகிறேன் என்றாரே அண்ணா. அவர் தம்பி அல்லவா நான்!
உடன்பிறப்பே, எத்தகைய தாக்குதல்களையும் தாங்கிப் பழக்கப்பட்டவர்கள் நாம். தாக்குவதற்கு அவர்களுக்கேஉரிமை, தவறியும் நம்மில் யாராவது பதில் சொல்லி விட்டால், அதை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
சரி, போகட்டும் ஆனை வேட்டைக்குச் செல்லும் போது, அம்புகளை முயல்களின் மீது வீசிக் கொண்டிருக்கும் வீண்வேலையில் ஈடுபடுவது விவேகமாகாது என்பதை அறியாதவர்கள் அல்ல நாம்.
எனவே இடையே இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன. தேர்தலில் ஆற்ற வேண்டிய ஆக்கப் பணிகளில்அயர்வு கொள்ளாது ஓய்வு, உறக்கம், இரைகளை ஓரம் கட்டி விட்டு உழைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications