அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறை தண்டனை
டெல்லி:
சர்வதேசப் புகழ் பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் சிறை தண்டனைவிதித்துள்ளது. இதற்காக அவர் திகார் சிறை கொண்டு செல்லப்பட்டார்.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கக் காரணமாக உள்ள நர்மதை அணைக் கட்டுத் திட்டத்தைஎதிர்த்து நர்மதா பசாவ் ஆந்தோலன் அமைப்பின் தலைவர் மேதா பாட்கருடன் சேர்ந்து அருந்ததியும் போராடிவருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நர்மதா பாதுகாப்புத்திட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தார் அருந்ததி. அதில், நீதிபதிகள் குறித்து சில விமர்சனங்களைச்செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் அடையாள சிறை தண்டனையோடு ரூ. 2,000 அபராதமும் செலுத்த வேண்டும் என அவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால்,அபராதம் செலுத்துவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை அருந்ததி ராய் கூறினார்.
சிறந்த எழுத்தாளரான இவர் சர்வதேச புகழ்பெற்ற புக்கர் பிரைஸ் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க அவர் மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் நிருபர்களிடம் பேசிய அருந்ததி, இந்தத் தீர்ப்பின் மூலம் நான்எனது பதில் மனுவில் கூறியிருந்தது (நீதிபதிகளை விமர்சித்தது) சரி தான் என்பது தெளிவாகிவிட்டது என்றார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய மேதா பாட்கர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் அருந்தது அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையின் முன் அவர் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவும் மேதா பாட்கள் முடிவு செய்துள்ளார்.