பாஜக கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும்: மார்க்சிஸ்ட்
திருப்பூர்:
உண்மையான மத நல்லிணக்கத்தை காக்க பாஜக கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை திருப்பூரில் வரதராஜன் கூறியதவாது:
குஜராத்தில் நடந்த வன்முறைக்கு பிறகும் கூட, வாஜ்பாய் அரசு மதச்சார்பின்மையை பாதுகாக்கும் என்று நம்புவதாககருணாநிதி கூறியுள்ளார். சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி நழுவ முயற்சிப்பது சந்தர்ப்பவாதநிலையை காண்பிக்கிறது.
இனியாவது திமுக உண்மையான மத நல்லிணக்கத்தைக் காக்கவும், வகுப்பு மோதலை தடுக்கவும், தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைக்கு குஜராத் அரசு உடந்தையாக உள்ளது. போலீசார்கலவரக்காரர்களை அடக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். ராணுவத்தை 2 நாள் கழித்து தான் அழைத்துள்ளனர்.
எனவே குஜராத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அம்மாநில அரசை நீக்கவேண்டும்.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.தற்போது வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால், கோடையில் குடிநீர் பிரச்சனை மற்றும் கடும் வறட்சிநிலவ வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வரதராஜன் கூறினார்.