இப்படியும் சில ஜென்மங்கள் !
ஜெய்ப்பூர்:
குஜராத்தில் நடந்த பயங்கர வன்முறை ராஜஸ்தானுக்கும் பரவுமா என்பது தொடர்பாக "பெட்" கட்டி சூதாடிய 81பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலோடு 58 கர சேவகர்கள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட பயங்கரவன்முறையில் இதுவரை 607 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே ராஜஸ்தானில் பல பேர் இந்த வன்முறைச் சம்பவங்களை வைத்து சூதாட ஆரம்பித்தனர். குஜராத்தில்நடந்த வன்முறை ராஜஸ்தானிலும் பரவுமா இல்லையா என்று அவர்கள் சூதாடினர்.
செல்போன் மற்றும் தொலைபேசி மூலமாக சர்வ சாதாரணமாக இவர்கள் தங்கள் சூதாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயும் பரிமாறப்பட்டன.
ராஜஸ்தானிலும் வன்முறை பரவி விட்டதாக வந்த புரளிகளையடுத்து, போலீசார் தங்கள் நடவடிக்கைகளைத்தீவிரப்படுத்தினர். அப்போது தற்செயலாக இதைக் கண்டுபிடித்த போலீசார், ஜெய்ப்பூரில் உள்ள 11 போலீஸ்நிலையங்கள் மூலம் சூதாட்டக்காரர்களின் பேச்சுக்களைக் கண்காணித்தபோது அதிர்ந்தே போய்விட்டனர்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் 81 சூதாட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 24 செல் போன்களும், பல தொலைபேசி சாதனங்களும், ரூ.75,000 ரொக்கப் பணமும் மற்றும்"பெட்" கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படம் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 81 பேரில் 49 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.