லாரியை வழிமறித்து ரூ.18 லட்சம் தாமிரத் தகடுகள் கொள்ளை
காரியாபட்டி:
லாரியை சோதனை செய்வது போல் நடித்து, ரூ.18 லட்சம் மதிப்புள்ள தாமிரத் தகடுகளை சில மர்ம நபர்கள்மற்றொரு லாரியில் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடியிலிருந்து தாமிரத்தகடுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி குஜராத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த காரியாப்பட்டி அருகே அந்த லாரி சென்றுகொண்டிருந்தபோது, அதை ஒரு கும்பல் வழிமறித்தது.
அதிகாரிகள் போன்ற தோற்றம் கொண்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், லாரியைச் சோதனை செய்ய வேண்டும்என்று கூறி லாரி டிரைவர்களை இறங்குமாறு கூறினர்.
பின்னர் திடீரென்று அந்த லாரி டிரைவர்களை தாக்கி, அதிலிருந்த தாமிரத் தகடுகள் அனைத்தையும் தாங்கள்கொண்டு வந்த லாரியில் அந்த மர்ம நபர்கள் ஏற்றிக் கொண்டனர்.
பின்னர் தகடுகள் ஏற்றிய அந்த லாரியை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டது.
இது குறித்து லாரி டிரைவர்கள் அருப்புகோட்டை காவல் நிலையத்தில் புகார் கூறினர். அருப்புகோட்டை போலீசார்இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.