தேவைக்கு அதிகமாகவே காவிரியில் தண்ணீர் திறந்து விட்டோம்: கர்நாடகா
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய 205 டி.எம்.சிக்குப் பதிலாக 209.2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியுள்ளது.
இதன் மூலம் காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுக்கு அதிகமாகவே இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
கடந்த வாரம் நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரான பாட்டீல், தமிழகத்திற்கு கடந்த ஏப்ரல்26ம் தேதி நிலவரப்படி 187.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால் இதை மறுத்து தமிழக சட்டசபையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் தமிழகமுதல்வருமான பன்னீர்செல்வம், கர்நாடக அரசு இதுவரை 160.47 டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்து விட்டுள்ளதாகக்கூறி, பாட்டீல் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சமீபத்தில் கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதிய ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி202.92 டி.எம்.சிக்குப் பதிலாக 160.47 டி.எம்.சி. தண்ணீ"ர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது என்றுஅக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கடிதத்தில்தான், தேவைக்கு அதிகமாகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிட்டிருப்பதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.
பிலிகுண்டுலு அணைக்கு 186.2 டி.எம்.சியும் மேட்டூர் அணைக்கு 23 டி.எம்.சியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணா, ஆக மொத்தம் 209.2 டி.எம்.சி. தண்ணீரைத்தமிழகத்திற்கு தாங்கள் திறந்து விட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஒரு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றுதான் காவிரி நடுவர் நீதிமன்றம்கூறியிருந்தது. ஆனால் இதைக் காட்டிலும் 4.2 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாகவே நாங்கள் திறந்து விட்டுள்ளோம்என்றும் அக்கடிதத்தில் கிருஷ்ணா கூறியுள்ளார்.