தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
சென்னை:
தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ ஏன் அவற்றைவைத்திருக்கவோ கூட தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம்விதிக்கப்படும். அவற்றைப் பயன்படுத்தினால் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை பைன் கட்ட நேரிடும்.
இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் கூட ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்தவேண்டும் என்றும் இந்தச் சட்ட மசோதா தெரிவிக்கிறது.
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மோகன் இந்தப் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க வகைசெய்யும் மசோதாவை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பிளாஸ்டிக் ஒரு மட்கிப் போகாத பொருளாக இருப்பதால், அது சுற்றுச்சூழலுக்குப் பல சீர்கேடுகளைவிளைவிக்கிறது.
தேவையில்லாமல் சாலைகளிலும் குப்பைகளிலும் எறியப்படும் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடுமண்ணாக மட்காமல் இருந்து, அப்படியே கிடக்கும்.
இதனால் மழை நீர் சரியாக பூமிக்கு அடியில் சென்று சேர்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாகக்குறைந்து கொண்டே போகிறது.
சுற்றுச்சூழலுக்குப் பல்வேறு சீர்கேடுகள் இவ்வாறு ஏற்படுவதையடுத்தே பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதிக்கும் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுவதாக மோகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பெரிய பெரிய ஓட்டல்களிலிருந்து சாதாரண வீடுகள் வரை இனி யாரும் பிளாஸ்டிக் டம்ளரைக்கூட வைத்திருக்க முடியாது.
குளியலறையில் உள்ள சோப்பு டப்பாவிலிருந்து சாப்பிடுவதற்காக நாம் உட்காரும் சேர்கள் வரை அனைத்தும்பிளாஸ்டிக் பொருட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.