விதிமுறையை மீறியதாக கருணாநிதி மீது வழக்கு
வேலூர்:
தேர்தல் விதிமுறைகளை மீறி வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 4பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக வாணியம்பாடி தொகுதி திமுக வேட்பாளரான நாகூர் ஈ.எம். ஹனீபாவுக்கு ஆதரவாகக்கருணாநிதி பிரச்சாரம் செய்தார்.
நேற்று முன் தினம் இரவு ஆம்பூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார்.
தேர்தல் விதிமுறைப்படி இரவு 10 மணி வரை தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் கருணாநிதி அந்தவிதியை மீறி அன்று இரவு 10.10 மணி வரை ஒலிபெருக்கியைப் பயன்படுத்திப் பேசியதாகப் போலீசார் கூறினர்.
இதையடுத்து கருணாநிதி தவிர ஆம்பூர் நகர திமுக செயலாளர் ஆனந்தன், ஒலிபெருக்கி உரிமையாளர் சுப்ரமணிமற்றும் கோவை ராமநாதன் ஆகிய நான்கு பேர் மீதும் ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதே போல் சமீபத்தில் வாணியம்பாடி தொகுதியில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,பெருமாள்பேட்டையில் இரவு 10.15 மணி வரை பிரச்சாரம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே ஜெயலலிதா மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.