கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி: பா.ஜ.க. கடும் தாக்கு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நம்புதலுக்கு உரியவர் கிடையாது. மாறாக, மதிமுக பொதுச் செயலாளரானவைகோதான் பாரதீய ஜனதாக் கட்சியின் உண்மையான நண்பராக இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர்கள்விமர்சித்துள்ளனர்.
மதிமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பா. சுப்ரமணியத்தை ஆதரித்து வைகோ, பா.ஜ.க.தலைவர்கள் கிருபாநிதி, கே.என். லட்சுமணன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டுப் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பேசிய பா.ஜ.க. தலைவர்கள் கருணாநிதியை சரமாரியாக விமர்சித்தனர். குறிப்பாக கிருபாநிதி மிகக்கடுமையான சொற்களால் கருணாநிதியை விமர்சித்தார். பிரச்சாரக் கூட்டத்தில் கிருபாநிதி பேசுகையில்,
ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க.வின் முதுகில் குத்துவதே திமுகவின் வாடிக்கையாக இருந்து வந்தது. கூட்டணி நலன்கருதி அதை நாங்கள் பொறுத்துக் கொண்டு வந்தோம். ஆனால் தனது தவறை திமுக ஒருபோதும் உணர்ந்ததில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒரு நம்பிக்கைத் துரோகி. அவரை நம்பவே முடியாது. ஆனால் வைகோஅப்படியில்லை. பா.ஜ.கவின் உண்மையான நண்பராக அவர் விளங்குகிறார்.
மதிமுகவும் பா.ஜ.க.வின் உண்மையான கூட்டாளியாகத் தான் இருக்கிறது. ஆனால் திமுகவோ நண்பனாக நடித்துவந்துள்ளது என்றார் கிருபாநிதி.
பா.ஜ.க தலைவர்களுக்குப் பிறகு வைகோ பேசுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருணாநிதி நீடிக்கிறார், ஆனால் தமிழக பாஜகவை கூட்டணியிலிருந்து விரட்டிவிட்டுள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
முடிந்தால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகட்டுமே? அந்தத் தைரியம் அவர்களிடத்தில் இல்லை.
சட்டசபைக்கே செல்லாமல் புறக்கணித்து வருகிறார் கருணாநிதி. இந்த நிலையில் சட்டசபை இடைத் தேர்தலில்திமுகவுக்கு ஒட்டுப் போடுமாறு கேட்க அவருக்கு உரிமையில்லை என்றார் வைகோ.