இடைத் தேர்தல் தொகுதிகளுக்கு 31ல் அரசு விடுமுறை
சென்னை:
இடைத் தேர்தலை முன்னிட்டு சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 சட்டசபைத்தொகுதிகளில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளின் கீழ் வரும் தனியார் தொழில் நிறுவனங்களும் 31ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
மதுக் கடைகள் மூடல்:
இதற்கிடையே இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் 31ம் தேதி மாலை 5 மணி வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான ஜூன் 2ம் தேதியும் மதுக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.