கண் கலங்கிய பெர்னாண்டஸ்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் மாநாட்டில் காஷ்மீர் தீவிரவாதிகளின் வன்முறையை பற்றி பேசிய போது பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்கள் கலங்கின. பேச முடியாமல் சில நொடிகள் தடுமாறினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்பேசியதாவது:
பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அவசரப்பட்டு, விவேகமில்லாமல் இந்தியா எந்த முடிவையும் எடுக்காது. விவேகமற்று,ஆர்வக்கோளாறில் அணு ஆயுதத்தை இந்தியா பயன்படுத்தாது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில்இந்தியா உறுதியாக உள்ளது.
ஆனால், தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டே இருப்போம் என்று எச்சரிக்கை விடுத்த பெர்னாண்டஸ், காஷ்மீரில்காலுசக்கில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை விளக்கும்போது தேம்பி அழுதார். அவரால் தொடர்ந்துபேச முடியவில்லை.
பின்னர் சுதாரித்துக் கொண்டு பேசிய பெர்னாண்டஸ் எப்போதும் காலுசக் சம்பவம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் இப்படி நிகழ்ந்துவிட்டது என்று கூறிய அவர் தான் கண் கலங்கியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பெர்னாண்டஸ், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தக் கோரி நாள்தோறும் பிரதமருக்கு வரும் நெருக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், அவர் தன்னை மிகவும் சிரமபப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார். இந்திய மக்கள் பாகிஸ்தான் மீதுமிகுந்த ஆத்திரத்துடன் உள்ளனர் என்றார்.
அமெரிக்க அமைச்சர் சந்திப்பு:
கடந்த 3 நாட்களாக சிங்கப்பூரில் உள்ள பெர்னாண்டசை அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பால்உல்போவிஸ் தொடர்ந்து பலமுறை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது தனது இடத்தைவிட்டுச் சென்று பெர்னாண்டஸ் அருகில் இருந்த இருக்கையில் போய்அமர்ந்து பால் பேசிக் கொண்டிருந்தார்.
பெர்னாண்டஸ் தங்கியிருந்த அறைக்கும் சென்று அவர் பேசினார். போரை எப்படியாவது இந்தியா தவிர்க்கவேண்டும் என அவர் பெர்னாணடசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதாக இந்திய அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கண்கலங்க பேசிவிட்டு பெர்னாண்டஸ் திரும்பியவுடன் அவர் அருகே சென்ற பால் உல்போவிஸ்மீண்டும் தீவிரவாதிகள் விவகாரம் தொடர்பாக பேசினார்.
பாகிஸ்தானுக்கு நிதியுதவியை முதலில் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என அப்போது பெர்னாண்டஸ்வலியுறுத்தினார். இது குறித்து அதிபர் புஷ்சுடன் பேசுவதாக பால் உறுதியளித்தார்.
இதன் பின்னர் நிருபர்களுடன் பேசிய பெர்னாண்டஸ்,
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே விவேகமற்று அணு ஆயுதத்தை பயன்படுத்தாது. எங்கள் இரு நாடுகளுக்கிடையே அணுஆயுதப் போர் மூளாது. மேற்கத்திய நாடுகளும் சீனாவும் எப்படி அணு ஆயுதத்தை பயனபடுத்துவதில் கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனவோ,அதே போல் இந்தியாவும் இருக்கும்.
இரு நாட்டு வீரர்களும் , துப்பாக்கியுடன் ஒருவரை நோக்கி ஒருவர் 5 மாத காலமாக நின்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித பெரியராணுவ சண்டையும் நடைபெறவில்லை. இரு பக்கமும் சுமார் அரை மில்லியன் ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர்.
எல்லைப் போர் முற்றிலுமாக முடிவுக்கு வரவேண்டும். இரு நாடுளுக்கிடையே உள்ள பிரச்சினை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் அல்-காய்தாா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமார் 2000லிருந்து 3000 பேர் உள்ளனர்.அவர்கள் காஷ்மீர் எல்லையைத் தாண்ட சந்தர்ப்பம் தேடிக் கொண்டுள்ளனர் என்றார்.