குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜெவுடன் வாஜ்பாய் ஆலோசனை
சென்னை:
குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் கூடுகிறது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் இன்று பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவார் என டெல்லியில் பிரதமர்அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிமுக செயற்குழு திங்கள்கிழமை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள்மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலைகுறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அப்போது தனது இறுதி முடிவை பிரதமரிடம்ஜெயலலிதா தெரிவிப்பார். தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கக் கோரி அவர் பிரதமரையும் திட்டக் கமிஷன் தலைவர் கே.சி.பந்தையும் சந்தித்துப் பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்வில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்துக்கு கூடுதல் நிதியைப் பெற ஜெயலலிதா முயல்வார்என்று தெரிகிறது.