ஊமையாகிவிட்டது தமிழக அரசு: இளங்கோவன் பாய்ச்சல்
கன்னியாகுமரி:
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவைப் பயிருக்குத் தேவையான நீரைப் பெற்றுத் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையானதண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெகு குறைவாக உள்ளதால் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது.இதுதொடர்பாக அரசுத் தரப்பு மெளனம் காப்பதும், கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல் ஊமையாகிக்கிடப்பதும் வருத்தம் தருகிறது.
டெல்லிக்கு பிரதமரைச் சந்திக்க முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது கூடவே, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டிச் செல்லவேண்டும். பிரதமரிடம் காவிரி நீர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்.
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டம் எதுவும் நடைபெறவில்லை. மாறாக எதிர்க்கட்சி தலைவர்களைப் பழி வாங்குவதிலும், கட்சிகளைஉடைப்பதிலுமே ஆளுங்கட்சியினர் முழுக் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றார் அவர்.