ஒரு வழியாய் வந்த பி.எஸ்.சி. டிகிரி
சென்னை:
அப்துல் கலாமின் பி.எஸ்.சி. சான்றிதழ் (டிகிரி சர்டிபிகேட்) சில நாட்களுக்கு முன்பு தான் அவரிடம்வழங்கப்பட்டது.
இந்தச் சான்றிதழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 48 ஆண்டு காலமாக பத்திரமாக இருந்தது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப் படிப்பு முடித்தவர் கலாம். பட்டப் படிப்பை முடித்த பிறகு டிகிரி சான்றிதழ் வாங்கக்கூட நேரம் கைகூடவில்லை கலாமுக்கு. இதையடுத்து அவர் தனது புரொவினஷல் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை வைத்துஅடுத்தடுத்து தனது படிப்புகளை படித்து வந்தார்.
காலப்போக்கில் டிகிரி சான்றிதழைப் பெற வேண்டும் என்பதையே மறந்து விட்டார்.
இந் நிலையில் கடந்த 1999ம் ஆண்டு கலாமுக்கு கெளவர டாக்டர் பட்டம் தரப்பட்டது. ஆனால் அதைப் பெற அவரால் வர முடியவில்லை.இதனால் பட்டம் அப்படியே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் ஓய்வு பெற்ற பின்னர் சென்னை அண்ணாப் பல்கலையில் பணியில் சேர்ந்தார்.
அப்போது அவரை வந்து சந்தித்த சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கலாமின் கெளரவ டாக்டர் பட்டத்தைஅவரிடம் வழங்கினார்கள்.
மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட கலாம், தனது பி.எஸ்.சி. டிகிரி சான்றிதழையே தான் இன்னும் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.இதைக் கேட்டதும் ஆச்சரியமடைந்த அதிகாரிகள் உடனடியாக அதைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறோம் என்று சென்றார்கள்.
அதன்படியே கலாமின் டிகிரி சான்றிதழைக் கண்டுபிடித்து அவரிடம் வழங்கினர்.
பி.எஸ்.சியில் இரண்டாவது வகுப்பில் கலாம் தேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை காலம் அந்த சான்றிதழ் பத்திரமாகஇருந்தது. இதை வாங்கியதும் சந்தோஷமடைந்த கலாம், இந்த சான்றிதழ் எங்கே என்று எனது அண்ணன் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார்.
முதலில் அவரிடம் போய் இதைக் காட்ட வேண்டும் என்றாராம்.