ஜனாதிபதி பெயரில் அமெரிக்காவுக்கு போலி கடிதம்: தஞ்சாவூர் இன்ஜினியர் கைது
தஞ்சாவூர்:
இந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் பெயரில் போலி கடிதத்தை பேக்ஸ் அனுப்பிய தஞ்சாவூரைச்சேர்ந்த என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இந்த பொறியாளர் ஹாக்கி விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர்.இவர் சமீபத்தில் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க ஹாக்கிக் கழகத்தில் தன்னை பதிவுசெய்து கொண்டு விளையாடி வந்தார்.
அவருக்கும் அமெரிக்க ஹாக்கி கழகத்தின் சில நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்துஇவரை ஹாக்கி கழகத்தில் இருந்து அவர்கள் நீக்கினர். இச் சம்பவம் நடந்த சில மாதங்களில் ராமச்சந்திரன் இந்தியாதிரும்பிவிட்டார்.
தஞ்சாவூரில் வழக்கம்போல் தனது சிவில் இன்ஜினியரிங் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் அமெரிக்க மகளிர் ஹாக்கி அணி இந்தியாவிற்கு விளையாட வருவதாகஇருந்தது. இதற்காக ஏற்பாடுகள் டெல்லியில் செய்யப்பட்டு வந்தன.
இது குறித்து அறிந்த ராமசந்திரன் அமெரிக்க ஹாக்கி கழகத்தை பழி வாங்கத் திட்டம் போட்டார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்தியஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் பெயரில் அமெரிக்க ஹாக்கிக் கழகத்துக்கு கடிதம் அனுப்பினார்.
ஜனாதிபதியின் முத்திரை, இந்தியாவின் தேசிய சின்னம் அடங்கிய லெட்டரில் ஜனாதிபதியின் கையெழுத்தையும்போட்டு அதை பேக்ஸ் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பினார்.
இதையடுத்து அமெரிக்க ஹாக்கிக் கழகம் தங்கள் பெண்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்பும் திட்டத்தைகைவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சகரத்துக்கும் இது தொடர்பாக அமெரிக்க ஹாக்கிக் கழகம் கடிதம்அனுப்பியது.
ஆனால், இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய விளையாட்டுத்துறை ஜனாதிபதி அலுவலகத்தைதொடர்பு கொண்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஜனாதிபதி அனுப்பவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளையாட்டுத்துறை புகார் அளித்தது. உள்துறை அமைச்சர்அத்வானி இது தொடர்பாக உடனே விசாரித்த கடிதம் அனுப்பிய நபரைக் கைது செய்ய உளவுப் பிரிவினருக்குஉத்தரவிட்டார்.
மத்திய உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் அந்த பேக்ஸ் தஞ்சாவூரில் இருந்து தான் அமெரிக்காவுக்குஅனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த நபரைப் பிடிக்க தனிப்படையினர் தஞ்சாவூர்வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூரில் தொலைத் தொடர்புத்துறைக்கு சொந்தமான மையத்தில் இருந்து தான் இந்த பேக்ஸ்அனுப்பப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்களிடம் விசாரணை நடத்திய தனிப்படையினர் ராமச்சந்திரனை மடக்கினர்.
அவர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.