ஜனாதிபதி தேர்தல்: வழக்கு போட்டவருக்கு நீதிமன்றம் அபராதம்
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தவிர பொது மக்களையும் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி வழக்குபோட்டவருக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் அருள் தாஸ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.அதில் ஜனாதிபதி தேர்தலில் பொது மக்களும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிசன்பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. அவருக்கு ரூ. 25,000 அபராதமும் விதித்தனர்.
தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:
இது போன்ற வழக்குகள் பொது மக்கள் நலனுக்காக போடப்படுவதில்லை, சுய விளம்பரத்துக்காகவே தாக்கல்செய்யப்படுகின்றன.
வெட்டியாக இந்த வழக்கைப் போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த அருள்தாஸ் ரூ. 25,000 அபராதம்செலுத்த வேண்டும். ஒரு மாதத்துக்குள் அவர் இந்தத் தொகையை உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றுகூறினர்.