துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிச்சயம்
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிச்சயம்
அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. அறிவித்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. அவரை ஆதரிக்கவும்முன் வந்தது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி பதவியை தங்களுக்கு விட்டுத் தர வேண்டும் என்று கோரியது.
ஆனால், துணை ஜனாதிபதியாக முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான பைரோன் சிங்செகாவத் நிறுத்தப்படுவார் என துணைப் பிரதமர் அத்வானி கூறினார். இதில் யாருக்கும் விட்டுத் தர மாட்டோம் எனஅவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.
துணைப் பிரதமரை அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்ற எங்கள்கோரிக்கையை அத்வானி ஏற்க மறுக்கிறார். தொடர்ந்து மோதல் போக்கில் அவர் செயல்படுவதால், அவர்களின்வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். எங்கள் கட்சி தனி வேட்பாளாரை நிறுத்தும் என்று ரெட்டி கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தந்தால் போட்டி நிச்சயம் மிகக் கடுமையாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் எங்கள் கட்சியின் வேட்பாளர் வென்று விடுவார் என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுகூறியுள்ளார்.
சென்னையில் லட்சுமி செகல்:
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு தந்தாலும் அப்துல் கலாமுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தரவில்லை.இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கேப்டன் லட்சுமி செகல் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று அவர் சென்னை வந்தார். தனக்கு அனைத்துக் கட்சியினரும் மனசாட்சிப்படிவாக்களிக்க வேண்டும் என அவர் இன்று கோரிக்கை விடுத்தார். நிருபர்களிடம் பேசிய அவர், வெற்றி தோல்விகுறித்து எனக்குக் கவலையில்லை.
உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ள நிலையில் அணு குண்டுவிஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக்குவது இந்தியா குறித்து தவறான அபிப்ராயத்தைஏற்படுத்திவிடும் என்றார் செகல்.