பாண்டிச்சேரி: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமான ரசாயனத் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
பாண்டிச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் உள்ள தொட்டியை இந்த தொழிலாளர்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது பாலு என்ற ஊழியர் தவறி தொட்டிக்குள் விழுந்தார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக மற்ற இரு தொழிலாளர்களும் உள்ளே குதித்தனர். உள்ளே குதித்த அவர்களை ரசாயன வாயுதாக்கியது. இதில் மூன்று பேரும் மூச்சு முட்டி மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் இறந்தனர்.
இவர்கள் நெடு நேரமாக தொட்டிக்குள் இருப்பதால் சந்தேகமடைந்த பிற ஊழியர்கள் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தபோது மூவரும்இறந்து கிடந்தது தெரியவந்தது.
தொட்டி மிகப் பெரியது என்பதாலும் உள்ளே விஷ வாயு இருந்ததாலும் உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் தரப்பட்டது.தீயணைப்புப் படையினர் வந்து தான் இந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.