கைதான மதிமுக பிரமுகர்களுக்கு 30 நாள் காவல்
மதுரை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 8 மதிமுக பிரமுகர்களையும் ஆகஸ்டு 7ம் தேதி வரை காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதிமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ். மணியம், மதுரைமாவட்டச் செயலாளர் வீர இளவரசன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், வழக்கறிஞர்பிரிவுச் செயலாளர் அழகுசுந்தரம், மதுரை மாநகரச் செயலாளர் பூமிநாதன், மதுரை மாவட்ட மாணவர் அணிஅமைப்பாளர் கணேசன் மற்றும் மதுரை மாவட்ட இலக்கிய அணித் தலைவர் நாகராஜன் ஆகிய 8 பேருக்கும்எதிராக கடந்த திங்கள்கிழமை இரவு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நண்பகலுக்குள்ளாகவே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை இந்த 8 மதிமுக பிரமுகர்களும் திருமங்கலம் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு,பின்னர் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி வெங்கடாஜலபதிஉத்தரவிட்டார்.
இதையடுத்து 8 மதிமுகவினரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.