15ம் தேதி பரோலில் வெளியே வருகிறார் வைகோ: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கிறார்
சென்னை:
வரும் 15ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரோலில் விடுவிக்கப்படுகிறார்.
இதற்கான அனுமதியை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியது.
இதையடுத்து இதற்காக தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமை முன் மொழிந்தவர்களில் நானும் ஒருவன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமைஉண்டு. இதனால் என்னை பரோலில் வெளியே விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலையை நீதிமன்றம் கோரியது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வைகோவை பரோலில்விடுவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். அதே நேரத்தில் அன்றைய தினம் வெளியேவந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கவோ, கோஷம் போடவோ கூடாது என்றார்.
இதையடுத்து வைகோவை 15ம் தேதி பரோலில் சிறையில் இருந்து வெளியே அனுப்ப தமிழக அரசுக்கு நீதிபதி கனகராஜ்உத்தரவிட்டார்.அவர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்படும் ஓட்டுப் பெட்டியில் வாக்களிப்பார்.