இன்று கருப்பு காந்தியின் நூற்றாண்டு விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருப்பு காந்தி என மக்களால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தமிழகம், பாண்டிச்சேரிமற்றும் டெல்லியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி விருதுநகரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த காமராஜர் பிரதமர்களை பதவியில் அமரவைக்கும் கிங் மேக்கராக உயர்ந்தார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் சென்னை பல்கலைக்கழகநூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

காமராஜரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். சபாநாயகர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அங்கு கவியரங்கங்களுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கிருஷ்ணமேனன்- காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள சேனா பவனில் உள்ள காமராஜரின் சிலைக்கு காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, சட்ட அமைச்சர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர்,பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன், டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ் மணி, மற்றும் காங்கிரஸ்எம்.பிக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னையில் கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து மற்றும் அமைச்சர்கள், குமரி அனந்தன் ஆகியோர்மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்வராக பதவி வகித்தாலும், டெல்லியில் மத்திய அரசில் மிகப் பெரிய தலைவராக விளங்கினாலும் கடைசி வரை எளிமையாகவும்,ஏழ்மையுடனும் வாழ்ந்தவர் காமராஜர். திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த பெரும் தலைவர். தனதுவீட்டுக்கு அவர் எதையும் சேர்த்ததில்லை.

நாட்டுப் பணி என்று எல்லா நேரமும் அலைந்த அவர் வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை, தாயாருக்கு உடல் நலக் குறைவுஏற்பட்டதால் அவரைப் பார்க்க பழ.நெடுமாறனுடன் சென்றார். அப்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு தனது வீட்டில் முதல்முறையாக சாப்பிட்டார் காமராஜர்.

கதர் வேட்டி, கதர் சட்டை தான் இவரது அடையாளம். சொந்தமாக கார் கூட கிடையாது. கையில் வாட்ச் கட்ட மாட்டார். கதர் சட்டையில்பெரிய பாக்கெட் வைத்திருப்பார். அதில் எப்போதுமே காசு இருந்ததில்லை. முதல்வராக இருக்கும்போது அரசு காரை தனது தாயார் கூடபயன்படுத்த இவர் அனுமதித்தது கிடையாது.

கதர் வேட்டி, சட்டையை அவை கிழியும் வரை பயன்படுத்திய எளிமைவாதி. தேசப் பற்றை உயிரென மதித்தவர். சுதந்திரப் போராட்டகாலத்தில் சிறை சென்றவர்.

நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த காமராஜரை இன்றைய அரசியல்வாதிகளுடன் தப்பித் தவறிக் கூட ஒப்பிட்டுவிட முடியாது.

தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்தவர் இவர். குழந்தைகளுக்கு மதிய உணவு தந்தால் படிக்க வருவார்கள் என்று மதிய உணவுத்திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முதலாக அறிமுகப்படுத்தி ஏழை வயிறுகளை நிரம்பச் செய்து படிப்பையும் கொடுத்த பெருமகன்.

அந்தப் பெருமகனை இன்றைய தினத்தில் தமிழகம் அன்புடன் நினைத்துப் பார்த்து பெருமை கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+