சிறையில் வைகோவுடன் மனைவி, மகன், தாணு சந்திப்பு
டெல்லி:
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து சட்டநிபுணர்களுடன் மதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது.
அக் கட்சியின் மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரனும், கண்ணப்பனும் கடந்த இரு நாட்களாக பல்வேறு சட்டநிபுணர்களை நேரில் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
மதிமுக வழக்குத் தொடரும்போது அது தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்கும். அப்போது தரும்விளக்கத்தின் அடிப்படையிலும், நீதிமன்றம் தரும் உத்தரவின் அடிப்படையிலும் பொடா சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
சிறையில் வைகோ- மனைவி சந்திப்பு:
இந் நிலையில் நேற்று சிறையில் வைகோவைச் சந்தித்தார் அவரது மனைவி ரேணுகா தேவி. மகன் வையாபுரி, ரேணுகா தேவிதவிர, வைகோவின் அக்காள் ராஜலட்சுமி, மருமகன் ஆனந்தன், மருமகன் கார்த்திகேயன், தம்பி ரவியின் மகன் ராஜேஷ் ஆகியோர்சந்தித்துப் பேசினர்.
கிட்டதட்ட ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. அவர்களுடன் மிக உற்சாகமாக வைகோ பேசியதாக மகன் கூறினார்.
வைகோவின் மனைவி ரேணுகா தேவி கூறுகையில், என் கணவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.அவர் நியாயமானவர். தர்மம் தான் இறுதியில் வெல்லும் என்றார்.
கலைப்புலி தாணு சந்திப்பு:
பின்னர் வைகோவை திரைப்படத் தயாரிப்பாளரும் தீவிரமான வைகோ ஆதரவாளருமான கலைப்புலி தாணு, மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன்ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் வெளியே வந்த எல்.கணேசன், பொடா சட்டத்தில் மாற்றம் வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தொண்டர்கள் தீக்குளிப்புபோன்ற மனம் வேதனை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை வைகோவும் சரி மதிமுக நிர்வாகிகளும் சரி மிகக் கடுமையாக எதிர்க்கிறோம்என்றார்.