ஸ்டாலின் சொத்துக் குவிப்பு வழக்கு தள்ளுபடி
சென்னை:
வருமானத்தை மீறி ஸ்டாலின் ரூ. 8 கோடி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது சிவகாசியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான செண்பகமூர்த்தி என்பவர் சென்னைமுதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். மேயர் பதவியை தவறாகப் பயன்படுத்தி ஸ்டாலின் ரூ. 8கோடி சொத்து சேர்த்துள்ளதாக செண்பகமூர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செண்பகமூர்த்திமேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம் முன் விசாரணைக்கு வந்தது.
ஆனால், ஸ்டாலின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றமும் இன்று தள்ளுபடி செய்தது.
தனது தீர்ப்பில் நீதிபதி கற்பகவிநாயகம் கூறியதாவது:
ஸ்டாலின் சொத்துக் குவிப்பு தொடர்பாக இவர்களிடம் விசாரிக்கலாம் என வழக்கு தாக்கல் செய்த செண்பகமூர்த்தி கொடுத்தபட்டியலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஸ்டாலின் ரூ. 8 கோடி சொத்து சேர்ததது தொடர்பாக எந்தஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் ஸ்டாலின் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச- ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல்செய்த ஆரம்ப விசாரணை அறிக்கையிலும் அவர் சொத்து சேர்த்ததற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் நீதிபதி.