சேலத்தில் விஷ சாராயம் குடித்த 3 கல் உடைக்கும் தொழிலாளர்கள் உயிர் ஊசல்
சேலம்:
சேலத்தில் விஷச் சாராயம் குடித்த 3 கல் உடைக்கும் தொழிலாளர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
ஆனால் இதனால் பிரச்சனை வருமோ என்று பயந்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒரு தொழிலாளியை வலுக்கட்டாயமாக அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டனர்.
சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியில் 13 இடங்களில் கள்ளச் சாராய வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
அப்பகுதியில் உள்ள சுரங்க நிறுவனங்களில் கல் உடைக்கும் தொழிலாளிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்பகூலிப் பணத்தையும் சாராயம் குடிப்பதிலேயே செலவழித்து விடுகின்றனர்.
அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி (55) என்பவரும் கல் உடைக்கும் தொழிலாளி தான்.கடந்த 21ம் தேதி வழக்கமாக சாராயம் குடிக்கும் இடத்திற்குச் சென்றார் அவர்.
அங்கு ரூ.10 கொடுத்து 2 கிளாஸ் சாராயத்தை வாங்கிக் குடித்த ராமசாமி, அடுத்த சிறிது நேரத்திலேயே உடல்வியர்த்து மயங்கி விழுந்தார். காக்கா வலிப்பு போல அவருடைய உடம்பு முழுவதும் வெட்டி வெட்டி இழுத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த அவருடைய மகன் வெங்கடேஷ் அவரை சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் ராமசாமியின் விவகாரம் வெளியே தெரிந்தால் விபரீதம்ஆகிவிடுமே என்று பயந்த போலீசார், நேற்று காலை 11 மணிக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ராமசாமியை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வந்துஆட்டோவில் ஏற்றி அவருடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுப் போய் விட்டனர்.
இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ராமசாமி உயிருக்குப் போராடி வருகிறார்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரிகள் சிலரும் ராமசாமி குடும்பத்தை மிரட்டஆரம்பித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்றும் மீறினால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும் ராசிபுரத்தைச் சேர்ந்த மற்றொருவரும் ராமசாமிசாராயம் குடித்து மயங்கி விழுந்த அதே இடத்திலேயே சாராயம் வாங்கிக் குடித்தனர்.
சாராயத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே அவர்கள் மயங்கி சுருண்டு விழுந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டசாராய வியாபாரியே அவர்கள் இரண்டு பேரையும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்பிஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தார்களா, விசாரணை எதுவும் நடத்தி வருகிறார்களாஎன்பது பற்றித் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications