கேரளத்தில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி
கோட்டயம்:
கேரளாவில் இன்று அதிகாலை நடந்த மிகப் பெரிய படகு விபத்தில் 40 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதுவரை 32 பேரின் உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
கோட்டயம் மாவட்டம் குமராகம் அருகே உள்ள வெம்பனாட் ஏரியில் காலை 5.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
கேரள நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இந்தப் படகு ஆழப்புலாவில் இருந்து குமாரகத்துக்குச் சென்று கொண்டிருந்தது.அதில், 300 பயணிகள் இருந்தனர். ஆனால், இதன் கொள்ளவு 150 பயணிகள் தான்.
பணத்துக்கு ஆசைப்பட்டு மிக அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது நிலைதடுமாறிய அந்தப் படகு நடு ஏரியில்கவிழ்ந்தது. குமாரகத்தை அடைய 20 நிமிடங்கள் இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
படகுடன் சேர்ந்து 300 பேரும் ஏரிக்குள் மூழ்கினர். இதில் சுமார் 200 பேரை ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்காப்பாற்றிவிட்டனர்.
40 பேர் வரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. படகு கவிழ்ந்தவுடன் அதிலிருந்து தப்பி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைஅருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து வந்து மீட்டனர். அதே போல கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுகடற்படை வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயனைப்புப் படையினரும் உடல்களை மீட்கும் வேலையில்ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏரிக்குள் மூழ்கிக் கிடக்கும் படகை மேலே கொண்டு வந்தால் தான் இறந்தவர்களின்சரியான எண்ணிக்கை தெரியவரும்.
இன்று கேரளத்தில் அரசுப் பதவிகளுக்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது. படகு விபத்தில் சிக்கிய பெரும்பான்மையானவர்கள்கோட்டையத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 75 வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.