சந்திரிகா- ரணில் மோதல் உச்சகட்டம்: திடீர் தேர்தல் வரலாம்
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் அதிபர் சந்திரிகாவுக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
அதிபர் சந்திரிகா தொடர்ந்து தொல்லை தந்து வருவதால் அவரது அதிகாரங்களைக் குறைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர ரணில் திட்டமிட்டுள்ளார். இந்தச் சட்டத் திருத்த முடிவுக்கு 10 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியைக் கலைத்துவிட்டு
இடைத் தேர்தலை சந்திப்போம் என ரணில் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து இதுவரை விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தையை எதிர்த்து வந்த சந்திரிகா திடீர் பல்டி அடித்து அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
புலிகளுடனான சமாதான உடன்படிக்கைக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு உள்ளது. இடைத் தேர்தல் நடத்தினால் ரணிலின் கட்சி மேலும் அதிக பலத்துடன் வெல்லும் என்பது உறுதி. இதனால் ரணிலின் மிரட்டலுக்கு சந்திரிகா பணிந்து வருகிறார்.
இந் நிலையில் ரணிலின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. அதில், இறுதிக் கட்டமாக அதிபருடன் பேசிப் பார்க்கவும் அந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படாவிட்டால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கவும் ரணிலுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரணிலை பதவி நீக்கம் செய்யவும் சந்திரிகா திட்டமிட்டதாகத் தெரிகிறது. அவரை நீக்கிவிட்டு தனக்கு வேண்டிய லட்சுமண் கதிர்காமரை பிரதமராக்க அவர் முயல்வதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து முந்திக் கொண்டு தானே ராஜினாமா செய்துவிட்டு புதிதாக தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓராண்டு காலத்தை முடித்துவிட்டால் அந்த அரசை அதிபரால் கலைக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ரணில் முடிவு செய்துள்ளார். இதை சந்திரிகா ஏற்காவிட்டால் ஆட்சியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள், பொருளாதாரத் திட்டங்களில் அரசை செயல்படாவிடாமல் சந்திரிகா தொடர்ந்து தடுத்தால் மீண்டும் தேர்தலை சந்தித்து மேலும் அதிக பலத்துடன் வென்று சந்திரிகாவின் அதிகாரத்தை முடிந்தவரை குறைப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ரணில்.