வறட்டு கெளரவம் வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு இளங்கோவன் அறிவுரை
சென்னை:
வறட்டு கெளரவத்தை கைவிட்டுவிட்டு காவிரி ஆணையக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ்கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், கடந்த காலங்களில் தமிழகத்தில் தொழிற்சாலைகளும் கல்விநிலையங்களிலும் திறக்கப்பட்டன. ஆனால், ஜெயலலிதாவின ஆட்சியில் கஞ்சித் தொட்டிகள் தான் திறக்கப்படுகின்றன.
இந்தத் தொட்டிகளைக் கூட பொது மக்கள் தான் திறக்கின்றனர். தங்கள் பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள் குழந்தைகளுடன்பட்டினி கிடப்பதைக் கண்டு வருந்தி மக்கள் ஆங்காங்கே இந்த கஞ்சித் தொட்டிகளை அமைத்து உதவி வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு அதிகாரிகளையும் ஆளும் கட்சி எம்.எல.ஏக்களையம் அனுப்பி கஞ்சித் தொட்டிகளை மூடச் சொல்கிறது.இது கடுமையாகக்கண்டிக்கத்தக்கது.
காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று காவிர் ஆணையக் கூட்டத்தில் தமிழகம் கலந்து கொள்ள வேண்டும். இந்தவிவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தயாராக இருக்கிறார்.
எனவே, முதல்வர் ஜெயலலிதா தனது வறட்டு கெளரவத்தை விட்டுவிட்டு பிரச்சனை தீர ஏது உதவுமோ அதைச் செய்ய முன் வரவேண்டும்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் வாழப்பாடி ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சித் தலைமைக்கு பரிந்துரைசெய்துள்ளேன் என்றார் இளங்கோவன்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை:
கஞ்சித் தொட்டிகள் வைத்து பசியாரும் நெசவாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும். அவர்கள்நெய்துள்ள வேஷ்டி, சேலைகளை அரசு வாங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.