பி.இ. படிப்பிற்கு நாளை சிறப்பு கவுன்சலிங்
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு கவுன்சலிங் நாளை நடைபெறுவதையடுத்து இன்று ஏராளமானவர்கள் இதற்காக விண்ணப்பம் செய்தனர்.
கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 29) பி.இ. படிப்பிற்கான கவுன்சலிங் முடிவடைந்த நிலையில் இன்னும் 11,902 இடங்கள் காலியாகவே உள்ளன. மொத்தமுள்ள பி.இ. சீட்டுகளின் எண்ணிக்கையில் இது 21.5 சதவீதம் ஆகும்.காலி இடங்கள் ஏற்படக் கூடாது என்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் நன்றாகக் குறைக்கப்பட்டன. அப்படி குறைத்த போதிலும் இந்த ஆண்டு இவ்வளவு காலி இடங்கள் ஏற்பட்டு விட்டன.இதற்கிடையே கடந்த பிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் சிறப்பு உடனடி மறு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டன.இதையடுத்து இந்த உடனடி மறு தேர்வில் வெற்றி பெற்ற ஏராளமான மாணவ-மாணவிகள் கூட இந்த ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் ஏராளமான காலி இடங்களும் ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.இதையடுத்து ஆகஸ்டு 2ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்பு கவுன்சலிங்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.இதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவ-மாணவிகள் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து விண்ணப்பம் செய்தனர். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு இன்று இரவு 8 மணிக்கே சிறப்பு கவுன்சலிங்கிற்கான இறுதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒட்டப்படும். இன்டர்நெட்டிலும் வெளியிடப்படும்.
இதையடுத்து நாளை காலை 9 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும்.
கவுன்சலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகள் இதற்காக ரூ.5,200 (எஸ்.சி. மற்றும் எஸ்.டி.-ரூ.1,100) கட்ட வேண்டும்.
"ப்ரீ சீட்" பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.12,500ம், "பேமெண்ட் சீட்" பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.47,000ம் கட்டணமாக ஆகஸ்டு 4ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்டு 7ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆஜராகி அன்றைக்கே சேர்ந்து விட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரியான டாக்டர் நாராயணசாமி கூறினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான இத்தகைய சிறப்பு கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.