பி.இ. சிறப்பு கவுன்சலிங்: விண்ணப்பிக்காதவர்களும் பங்கு பெறலாம்
சென்னை:
பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடக்கும் சிறப்பு கவுன்சலிங்கில் இதற்காக விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு கவுன்சலிங் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 29) பி.இ. படிப்பிற்கான கவுன்சலிங் முடிவடைந்த நிலையில் இன்னும் 11,902 இடங்கள் காலியாகவே உள்ளன. மொத்தமுள்ள பி.இ. சீட்டுகளின் எண்ணிக்கையில் இது 21.5 சதவீதம் ஆகும்.
காலி இடங்கள் ஏற்படக் கூடாது என்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் நன்றாகக் குறைக்கப்பட்டன. அப்படி குறைத்த போதிலும் இந்த ஆண்டு இவ்வளவு காலி இடங்கள் ஏற்பட்டு விட்டன.
இதற்கிடையே கடந்த பிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் சிறப்பு உடனடி மறு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து இந்த உடனடி மறு தேர்வில் வெற்றி பெற்ற ஏராளமான மாணவ-மாணவிகள் கூட இந்த ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரிகளில் ஏராளமான காலி இடங்களும் ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்று நடந்த சிறப்பு கவுன்சலிங்கில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ-மாணவிகள் இந்த சிறப்பு கவுன்சலிங் மூலம் என்ஜினியரிங் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாகச் சென்றனர்.
இதற்கிடையே இந்த சிறப்பு கவுன்சலிங்கிற்காக நேற்று விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் வரும் 5ம் தேதி வரை இது நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரியான டாக்டர் நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
இந்த சிறப்பு கவுன்சலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகள் இதற்காக ரூ.5,200 (எஸ்.சி. மற்றும் எஸ்.டி.-ரூ.1,100) கட்ட வேண்டும்.
"ப்ரீ சீட்" பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.12,500ம், "பேமெண்ட் சீட்" பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.47,000ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆஜராகி அன்றைக்கே சேர்ந்து விட வேண்டும் என்றும் டாக்டர் நாராயணசாமி கூறினார்.