பா.ஜ.கவினருக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகள்
டெல்லி:
இந்தியா முழுவதும் பா.ஜ.கவினர், ஆர்.எஸ்.எஸ். உள்பட சங் பரிவார் அமைப்புகளின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர், மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்க் மற்றும் சமையல் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது.
முறைகேடாக இந்த பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் எஜென்சிகளை ஒதுக்கிய பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஆளும் கட்சியினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து லோக்சபாவும் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டன.
பா.ஜ.கவினருக்கு பெட்ரோல் பங்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள விவரத்தை ஒரு ஹிந்தி நாளிதழ் விவரமாகவும் ஆதாரங்களுடனும் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறி வந்தது.
இந் நிலையில் பத்திரிக்கையிலும் செய்தி வெளியானதால் இன்று காலை லோக்சபா கூடியவுடன் எதிர்க் கட்சியினர் கையில் அந்த இந்தி நாளிதழ்களுடன் நுழைந்தனர்.
அதில் வந்துள்ள செய்தியை சுட்டிக் காட்டி ராம் நாயக் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரினர். இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவிக்கவே கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ராம் நாயக் ஒரு விளக்க அறிக்கை தாக்கல் செய்வார் என ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், இதை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ராம் நாயக் பதவி விலக வேண்டும் என எதிரக் கட்சியினர் கோரின. அவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் மனோகர் ஜோஷி இன்று முழுவதும் ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபாவிலும் இதே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து ராஜ்யசபா கூடிய 10 நிமிடத்திலேயே அதை ஒத்தி வைத்துவிட்டார் அவைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா.
வாஜ்பாய் ஆலோசனை:
இந்த முறைகேடான பெட்ரோல் பங்க் ஒதுக்கீடுகள் குறித்து எதிர்க் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்சனையை சமாளிப்பது குறித்து பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் ஆகியோர் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தவறு நிகழ்ந்திருந்தால் திருத்தப்படும்: பா.ஜ.
எந்தெந்த சங் பரிவார் உறுப்பினருக்கு எங்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கப்பட்டது, எங்கு கேஸ் ஏஜென்சி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அந்த இந்தி நாளிதழ் விலாவாரியான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இந்த ஒதுக்கீடுகளில் தவறு ஏதும் நடந்திருந்தால் அது திருத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதை பா.ஜ.க. ஏற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications