திருச்சி, தஞ்சை போலீசாரிடம் குறை கேட்டார் ஜெ.
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் 3வது கட்டமாக திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலப் போலீசாரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று குறை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக போலீசாரிடம் குறை கேட்கும் திட்டம் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1,622 போலீசார் அன்று ஜெயலலிதாவை நேரில் தனித் தனியாகச் சந்தித்து தங்களுடைய குறைகளைக் கூறி மனுக்களையும் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி மேற்கு மண்டலத்தின் சுமார் 1,700 போலீசார் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவித்தனர். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையினரும் அன்று ஜெயலலிதாவிடம் மனுக்களைக் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை மூன்றாவது கட்டமாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த போலீசார், சிறைத் துறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களுடைய குறைகளைத் தெரிவித்தனர்.
சுமார் 1,212 போலீசார் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஐந்தைந்து பேராகச் சென்று தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் ஜெயலலிதாவிடம் தெரிவித்து இது தொடர்பாக மனுக்களையும் அவரிடம் அளித்தனர்.
முன்னதாக போலீசாரிடம் ஜெயலலிதா பேசுகையில்,
நாட்டு நலன் கருதி பணியாற்றி வரும் போலீசார் மன நிறைவுடனும் உற்சாகத்துடனும் இருப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி வைப்பது என்னுடைய கடமை என்றார் ஜெயலலிதா.
அடுத்த கட்டமாக வரும் புதன்கிழமை (ஆகஸ்டு 7) வடக்கு மண்டலப் போலீசாரிடமும் சென்னை போலீசாரிடமும் ஜெயலலிதா குறை கேட்கவுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications