தமிழக பக்தர் உள்பட 9 அமர்நாத் யாத்ரீகர்கள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பகல்காம் அருகே இன்று அதிகாலை முகாமில் தூங்கிக் கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்களை நோக்கி அல்-மன்சூரியா என்ற புதிய அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் ஒரு தமிழக பக்தர் உள்பட 9 யாத்ரீகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த ஜூலை 19ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்குப் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் பாதுகாப்புக்களையும் மீறி கடந்த வாரம் ஸ்ரீநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் கிரனைட் வெடிகுண்டுகளை வீசினர். இதில் காரில் சென்று கொண்டிருந்த இரண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு பகல்காம் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் தீவிரவாதி திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினான்.
அப்போது அமர்நாத் யாத்ரீகர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி அந்தத் தீவிரவாதி சுமார் ஒரு மணி நேரம் ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டான்.
கிரனைட் குண்டுகளையும் அவர்கள் மீது தீவிரவாதிகள் எறிந்தான்.
உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனாலும் அதற்குள்ளாகவே ஒன்பது அமர்நாத் யாத்ரீகர்கள் தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டுக்கு அந்த இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்தியன் வங்கி ஊழியர் டி. பாலச்சந்திரன் (40) என்ற பக்தரும் பலியானார்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அருகிலுள்ள மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டுள்ள மற்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா உருவாக்கியுள்ள புதிய பிரிவான அல்-மன்சூரி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அமர்நாத் யாத்ரீகர்களைத் தாக்க மாட்டோம் என்று காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்தத் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சுமார் 30 அமர்நாத் யாத்ரீகர்கள் பலத்த குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கவலைக்கிடமாக உள்ள 15 பேர் உடனடியாக விமானம் மூலம் ஸ்ரீநகர் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை பின்னர் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சமன்லால் குப்தா மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே ஜம்மூவிலிருந்து 2,082 பக்தர்கள் கொண்ட 18வது அமர்நாத் யாத்திரை குழு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கிளம்பியது. இதுவரை 86,000க்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் குகையை அடைந்து சிவலிங்க தரிசனம் செய்துள்ளனர்.
ஒரு ராணுவ வீரர், 2 தீவிரவாதிகள் கொலை:
இந்நிலையில் குப்வாரா பகுதியில் உள்ள ராஷ்ட்ரீய ரைபிள்ல் படையினரின் முகாமுக்குள் தீவிரவாதிகள் இன்று காலை புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த முகாமின் வாயிற்காவலரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உள்ளே நுழைந்தனர். ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான்.
பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தீவிரவாதிகள் என்று தெரிகிறது. இன்று காலை 6.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.