கவுஸ் பாட்சா !
சென்னை:
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று சென்னையில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வரும் கவுஸ் பாட்சா உடனடியாக சரணடைய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஜய்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி கவுஸ் பாட்சா. இவனை நீண்ட தேடலுக்குப் பின் போலீசார் மடக்கினர். ஆனால், சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றான்.
தப்பியதோடு நிற்காமல் சென்னையில் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துவிட்டான். திருமங்கலம், கே.கே. நகர் ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் இரவு அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களை கவுஸ் பாட்சா தான் நடத்தியுள்ளான் என்று தெரியவந்துள்ளது.
அவனது கைரேகைகள் இந்த இரு இடங்களிலும் பதிவாகியுள்ளன. அவனைப் பிடிக்க பல தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவன் சிக்காமல் தப்பி வருகிறான்.
ஒவ்வொரு இரவிலும் இன்று அவன் எந்த வீட்டில் கைவரிசையைக் காட்டுவானோ என சென்னை போலீசார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்காரும் நிலையை உருவாக்கியுள்ளான்.
இதையடுத்து அவன் உடனடியாக சரணடைய வேண்டும், இல்லாவிட்டால் கண்டவுடன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை உருவாகும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் விஜய்குமார்,
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று காவல்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளான் கவுஸ் பாட்சா. அவனைத் தப்பவிட்ட போலீசாருக்கு கெடு விதித்துள்ளேன். அவனை உடனே பிடித்துக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளேன்.
பல தனிப் படைகளும் அவனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கவுஸ் பாட்சா சரணடைந்துவிடுவது அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் நாங்கள் எக்ஸ்ட்ரீம் நடவடிக்கையில் இறங்குவோம். அது என்ன என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications