நான் ஒரு தமிழ்ப் பெண்: ஜெயலலிதா
சென்னை:
நான் தமிழ்ப் பெண் தான் என்று ஜெயலலிதா கூறினார்.
இன்று சென்னையில் நிருபர்களை ஜெயலலிதா சந்தித்தார்.
சோனியாவை வெளிநாட்டவர் என்று சொல்லும் நீங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். எனவே, நீங்கள் எப்படி தமிழக முதல்வராகஇருக்கலாம் என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருக்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா,
நான் மைசூரில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் தான் பிறந்தேன். கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும் நான் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவள் தான்.ஆகவே, நான் தமிழச்சி தான் என்றார்.
உங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர். கூட வெளிநாட்டைச் சேர்ந்தவர் (இலங்கையைச் சேர்ந்தவர்) தானே என்று ஒரு நிருபர் கேட்டார்.
இதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், இப்போது ஏன் அந்தப் பிரச்சனையை கிளப்புகிறீர்கள். அவரது பெற்றோர் இந்தியர்கள் தான்.அவர்கள் இலங்கையில் சில காலம் வசித்தனர். அப்போது அங்கு எம்.ஜி.ஆர். பிறந்தார். அவர் கைக் குழந்தையாக இருந்தபோதே அந்தக்குடும்பம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.
நீங்கள் இப்போது இந்த விவகாரத்தைக் கிளப்புவது குழந்தைத்தனமானது என்றார்.
சன் டிவி நிருபருக்கு டோஸ்:
நிருபர்கள் சந்திப்பின்போது சன் டிவி நிருபர் ஒரு கேள்வியை எழுப்பினார். அப்போது அவரால் கோர்வையாக தமிழில் பேச முடியவில்லை.திக்கித் திணறி பேசினார்.
அப்போது பேசிய ஜெயலலிதா, முதல்ல கேள்வி கேட்க கத்துக்குங்க. இப்படித் திணர்றீங்க. நீங்க எந்த பத்திரிக்கை? என்று கேட்டார்.
உடனே அந்த நிருபர், சன் டிவி என்று பதிலளிக்க அறையில் சிரிப்பொலி எழுந்தது.
இடைமறித்த ஜெயலலிதா, அது தான் இப்படி இருக்கீங்க. உங்களுக்கு பயிற்சி பத்தலைன்னு நினைக்கிறேன் என்றார்.