ஜெவைக் கண்டித்து 9ம் தேதி காங். போராட்டம்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து கடுமையாக விமர்சித்து வரும் முதல்வர்
ஜெயலலிதாவைக் கண்டித்து தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா வாழ, தனது மாமியாரையும், கணவரையும் பயங்கரவாதத்திற்குப் பறி கொடுத்த, தேசியதியாக குடும்பத்தைச் சேர்ந்த, நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமான சோனியா காந்தியை பழி தூற்றிய ஜெயலலிதாவை கண்டித்தும்,அதிமுக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால், வறுமையின் பிடியிலும், அடக்குமுறையிலும் சிக்கி வாடும் விவசாயிகள், நெசவாளர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆதரவாகவும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு இந்த அறப்போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.