காவிரி: தும்பைவிட்டு வாலைப் பிடித்திருக்கிறார் ஜெயலலிதா- கருணாநிதி பேச்சு
சென்னை:
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துள்ளது. நாங்களும் வேறு வழியில்லாமல் வாலைப் பிடிக்கவேண்டியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சோனியா வெளிநாட்டவர் என்ற விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் தான் எங்களது நிலையை வெளியில் சொல்வோம் என்றார்.
கோவாவில் ஒரு வார ஓய்வுக்குப் பின்னர் இன்று அவர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை நூற்றுக்கணக்கானதிமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
வாக்குவாதம் தேவையா?:
நாகப்பா கடத்தப்பட்ட விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் இணைந்து செயல்படவில்லை. இது நாகப்பாவின் நலனுக்கு நல்லஎன்பதை இருவருமே உணர வேண்டும். இந்த விவகாரத்தில் இந்த இரு முதல்வர்களும் செய்துவரும் வாக்குவாதம் தேவையில்லதாதது.
கடந்த 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் வீரப்பனை பிடிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், நாகப்பாவை பத்திரமாக மீட்பதுதான் இப்போது அதைவிட முக்கியம்.
வீரப்பன் பிடிபட்டால் அது மிகப் பெரிய அதிசயம் தான். அந்த அதிசயம் நடக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.
வேறு வழியில்லை:
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை, தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.ஆனால், தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை மேலும் போட்டு குழப்ப திமுக விரும்பவில்லை. இதனால் அரசுஎடுத்துள்ள நிலையை திமுகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
தஞ்சை விவசாயிகள் சம்பா நெல்லையாவது சாகுபடி செய்யும் வகையில் தமிழகத்துக்கு உரிய நீரை அரசு பெற வேண்டும்.இந்தவிவகாரத்தில் மத்திய அரசை தமிழக முதல்வர் குறை கூறினார். இதற்கு பிரதமர் வாஜ்பாய் தான் பதிலளிக்க வேண்டும்.
ஸ்டாலின் அலையவில்லை:
மேயராக இரண்டாவது முறை ஸ்டாலின் பதவியேற்றது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக மேல்முறையீடுசெய்யாது. ஸ்டாலின் உள்பட திமுகவில் யாரும் பதவிக்கு அலையவில்லை. இதனால் அந்தத் தீர்ப்பைப் பற்றியும் எங்களுக்குக்கவலையில்லை.
சோனியா விவகாரம்:
வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உயர் பதவிகளுக்கு வரக் கூடாது என்ற விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் தான் எங்களது கருத்தைத்தெரிவிப்போம் என்றார் கருணாநிதி.
வெளிநாட்டவர்களை உயர் பதவிகளுக்கு வர விடாமல் தடுக்கும் கொள்கை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்த தேர்தல்அறிக்கையில் சேர்க்கப்படும் என்று பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டபோது,இது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விவாதம் வரட்டும். நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்கிறோம் என்றார்.
சோனியா குறித்து ஜெயலலிதாவின் தாக்குதல் குறித்துக் கேட்டபோது, ஜெயலலிதாவின் பேச்சுக்கு சோனியா காந்தியே கருத்துத் தெரிவிக்கமறுத்துவிட்டார். அப்புறம் நாங்கள் ஏன் இதில் கருத்துத் தெரிவிக்க வேண்டும். மக்கள் பிரச்சனையை, இந்த அரசு தினமும் சந்தித்து வரும்எண்ணற்ற விவகாரங்களை திசை திருப்பவே ஜெயலலிதா இப்படிப் பேசி வருகிறார். நானும் அவரை மாதிரியே பேசி மக்கள் கவனத்தைசிதறடிக்க விரும்பவில்லை என்றார்.
-->












Click it and Unblock the Notifications