திருச்செந்தூர் கோர்ட்டில் நெடுமாறன் ஆஜர்: காவல் நீட்டிப்பு
திருச்செந்தூர்
திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை வரும் 26ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பால்துரை உத்தரவிட்டார்.
திருச்செந்தூரில் கடந்த 1992ம் ஆண்டு தமிழ் மறுமலர்ச்சி மன்றம் சார்பில் நடந்த கூட்டத்தில்விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு சென்ற அமைதி காக்கும் படைக்கு எதிராகவும் கருத்துக்கூறியதாக நெடுமாறன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு தொடர்பாக திருச்செந்தூர் கோர்ட்டில் நெடுமாறன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நெடுமாறன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ் மறுமலர்ச்சி மன்றத்துக்கு நான் தலைவர்இல்லை என்றும், மேலும் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக மத்திய அரசு அதிகாரி தான்விசாரணை நடத்த வேண்டும் என்றும் தன் மனுவில் நெடுமாறன் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிவில் நடைமுறைச் சட்டம் தொடர்பாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால்இவ்வழக்கின் மீதான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி பால்துரை ஒத்திவைத்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த நெடுமாறன் நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகளைத் தூண்டி விட்டு தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடமுடியாமல் தடுத்து வருகிறது.
காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலியிலிருந்து மின்சாரம் செல்வதைத் தடுக்க தமிழகவிவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும். இதற்கு தமிழக அரசும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்நெடுமாறன்.
பின்னர் நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.