ரத்தாகிறது இலவச மின்சாரம்: விவசாயிகளுக்கு "ஷாக்"
சென்னை:
கடந்த 3 ஆண்டுகளுக்கான மின் கட்டண பாக்கியைச் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை விலக்கிக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இலவச மின்சாரத் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, நிதி நிலைமை மோசமாக இருப்பதால் பல திட்டங்களோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு விவசாயிகளும் பல எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதை தமிழக அரசு அப்போதைக்கு வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் தமிழக அரசின் மின்வாரியம் சமீபத்தில் விவசாயிகளுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான கால கட்டத்திற்கு, ஒரு ஹார்ஸ் பவர் உள்ள பம்ப் செட்டுகளுக்கு தலா ரூ.250 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குரிய கட்டணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இனிமேல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.125 வீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு விலக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications