கண்காணிப்பு குழுவுக்கு ஒத்துழைப்பு: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அதே போல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 நாட்களுக்குள் முழுமையான பதில்களைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக முதல்வர்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு 0.8 டி.எம்.சி. நீர் விட பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார். ஆனால், விவசாயியின் போதை சாவைக் காரணம் காட்டிநீர் விட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதையடுத்து தமிழகத்திலும் கர்நாடகத்திலும் அணைகளில் உள்ள நீரின் அளவு, பயிர்களின்நிலை குறித்து அறிந்து தன்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார்.
இந்தக் கண்காணிப்புக் குழு பெங்களூர் வந்து அதிகாரிகளுடன் பேசிவிட்டு கர்நாடகத்தின் அணைகளை பார்வையிட்டது.பயிர்களையும் பார்வையிட்டது. இதை முடித்துக் கொண்டு தமிழகம் வந்தது.
ஆனால், இது ஒரு வெட்டிக் குழு என்று கூறிய தமிழகம், அணைகளை இந்தக் குழு பார்வையிடுவதை எதிர்த்தது. தமிழக அரசின்இந்த எதிர்ப்பு காரணமாக குழுவினர் அணைகளையும் தமிழக பயிர்களையும் பார்வையிடாமல் திரும்பிச் சென்றனர்.
டெல்லி திரும்பிய இக் குழு தங்களால் தமிழக அணைகளை பார்வையிட இயலாததால் அறிக்கை தாக்கல் செய்ய முடியாதநிலையில் இருப்பதாக பிரதமரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்கவில்லை எனமத்திய அரசே (கண்காணிப்புக் குழு மூலமாக) தமிழக அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந் நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததை எதிர்த்து தமிழகம் தாக்கல் செய்த நீதிமன்றஅவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கிர்பால், நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,கண்காணிப்புக் குழுவுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அக்டோபர் 3ம் தேதிக்குள் தமிழக அணைகளின் நீர்மட்டத்தையும், பயிர்களின் நிலையையும் அறிந்து பிரதமர் வாஜ்பாயிடம்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அறிக்கையின்நகல் 4ம் தேதி நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் நீதிமன்றம் இதில் இறுதி முடிவு எடுக்கும்எனவும் நீதிபதிகள் கூறினர்.
கர்நாடக முதல்வர் மீது தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், முதல்வர் கிருஷ்ணா,அமைச்சர் பாட்டீல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 3 அதிகாரிகளும் 3 நாட்ளுக்குள் முழுமையான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக கண்காணிப்புக் குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரத்தோகி கூறுகையில், தமிழக அரசின்ஒத்துழைப்பு இல்லாததால் தான் இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புக் குழுவால் முடியவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது? என்று கேட்டனர்.
இதற்கு நீண்ட நேரம் மெளனம் காத்த ரத்தோகி, கண்காணிப்புக் குழுவினர் தமிழக அணைகளை பார்வையிட செல்லும்போதுபோலீஸ் பாதுகாப்புத் தர வேண்டும் என்று கேட்டார்.
கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் தவான் பேசுகையில், வரவுள்ள மழையில் அதிகம் பயன்பெறப் போவதுதமிழகம் தான். இப்போது கர்நாடகத்தில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டியது தான் மிகவும் அவசியம். நீரை இப்போதுதிறந்துவிட்டால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
அப்போது இடையில் குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால், கர்நாடகத்தின் இந்த வாதம் வழக்கைஇழுத்தடிக்கும் நோக்கம் கொண்டது. மழையயே பெய்யாத நிலையில் வரப் போகிற மழை பற்றியெல்லாம் கர்நாடக வழக்கறிஞர்பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி எதையாவது பேசி, பிரச்சனையை திசை திருப்பி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்துதப்பித்துக் கொள்ள கர்நாடகம் முயல்கிறது.
நீதிமன்றத்தையும் அவமதித்துவிட்டு, பிரதமரின் உத்தரவையும் அவமதித்துவிட்டு இங்கு வந்து திசை திருப்பல் வாதத்தில்ஈடுபட்டுள்ளது கர்நாடகம் என்றார்.
இப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் கண்காணிப்புக் குழுவினரை தமிழக அரசு அணைகளைப் பார்வையிடவும்பயிர்களைப் பார்வையிடவும் அனுமதிக்கும் என்று வேணுகோபால் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications