போராட்டத்தில் "நோ அரசியல்": பாரதிராஜா கண்டிப்பு
சென்னை:
தமிழன் என்ற ஒரே அடையாளத்தோடு மட்டும் நெய்வேலியில் சங்கமிப்போம். அரசியல் கட்சிகளின் கொடியைநெய்வேலி போராட்டத்தின்போது பயன்படுத்த வேண்டாம் என்று இயக்கநர் பாரதிராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
நெய்வேலியில் 12ம் தேதி கலையுலகம் சார்பில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து பாரதிராஜா அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை விவரம்:
இனிய தமிழ்த் திரையுலக சகோதர, சகோதரிகளே, ரசிகர்களே. கனத்த இதயத்தோடு நீதி கோர நெய்வேலிக்குஅழைக்கிறோம்.
கர்நாடக அரசின் இன வெறிக்கும், மொழி வெறிக்கும் எதிராக தமிழ்த் திரை உலகின் தமிழர் பாதுகாப்பு இயக்கம்சார்பில் வருகிற 12ம் தேதி நெய்வேலியில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளோம்.
எங்கள் கிளைகளும், பூக்களும் நகரங்களில் மணந்தாலும், வேர்கள் இன்னும் கிராமங்களில் தான் உள்ளன.எங்களை வாழ வைத்தவர்களை வாடி நிற்க வைத்து விட்டு, தமிழனின் வாழ்க்கையையும் வயிற்றையும் கர்நாடகஅரசு கருக விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நியாயம் கேட்கும் தமிழக அரசையும், தமிழக மக்களையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அடாவடியாப்புறக்கணிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.
இந்தப் போராட்டம் அறிவித்த நாள் தொடங்கி எங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துள்ள பல்வேறு மாவட்டவிவசாய சங்கத்தினர், இலக்கியவாதிகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அரசியல்தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு, தமிழ் உணர்வின் அடிப்படையில் மட்டுமே, தமிழ்த்திரையுலகினரால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணியில், அரசியல் ரீதியான மாறுபட்ட உணர்வுகள் ஏதும் கலந்துவிடக் கூடாது என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு.
எனவே இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் தமிழ்த் திரையுலகினர் கருப்பு பேட்ஜ் ஒன்றை மட்டுமேபயன்படுத்த வேண்டும். வேறு எந்த அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் சின்னங்களையோ, கொடிகளையோபயன்படுத்தக் கூடாது என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இது தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் திரைப்பட துறையினர் நடத்தும் கட்சி சார்பற்ற பேரணியாகும். தமிழர்கள்என்ற அடையாளத்தோடு மட்டும் அங்கு சங்கமிப்போம்.
தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்து வெளியிடும் முறையான வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மற்றும்பேனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழன் அணி அணியாய் திரண்டாலும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் காப்பதில் உலகிற்கு முன்னோடி என்பதைஅனைவருக்கும் எடுத்துக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் பாரதி ராஜா.
மக்கள் தமிழ் தேசம் ஆதரவு
இதற்கிடையே நெய்வேலியில் திரையுலகினர் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்கள்தமிழ் தேசம் கட்சி கூறியுள்ளது.
இக்கட்சியின் தலைவர் எஸ். கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு 12ம் தேதி காவிரி நீர் பிரச்சினைக்காக கர்நாடக அரசைக் கண்டித்துகலையுலகினர் நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறோம்.
இந்தப் போராட்டத்திற்கு மக்கள் தமிழ் தேசம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்றுகூறியுள்ளார்.