நாளை டெல்லி செல்கிறார் ஜெ.: காவிரி குறித்து வாஜ்பாயுடன் பேசுவார்
சென்னை:
நிதிநிலைமை குறித்து விவாதிப்பதற்காக வரும் 18ம் தேதி பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ள முதல்வர்கள் மாநாட்டில்கலந்து கொள்வதற்காக நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரிப் பிரச்சனை குறித்தும்பிரதமரிடம் விவாதிக்கவுள்ளார்.
நிதிநிலை நெருக்கடி காரணமாகக் கடந்த பல மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி நடவடிக்கைகளையும்மேற்கொள்ள முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இதில் தற்போது வறட்சியும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
சமீபத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக வந்திருந்த மத்தியக் குழுவினரிடம் ஜெயலலிதாஇதற்கான கோரிக்கையை விடுத்தார்.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்,அம்மாநிலங்களின் முதல்வர்களும் கூட மத்திய அரசை நாடியுள்ளனர்.
இதையடுத்து இதுகுறித்து விவாதிப்பதற்காக வரும் 18ம் தேதி முதல்வர்கள் மாநாட்டை வாஜ்பாய் கூட்டியுள்ளார்.கூட்டத்தின் முடிவில் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவது குறித்து அவர் முடிவெடுப்பார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.
அதிமுகவின் 31வது ஆண்டு விழா நாளை சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அந்த விழாவில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிடும் ஜெயலலிதா, நாளை மாலையே டெல்லிபுறப்படுகிறார்.
முதல்வர்கள் மாநாட்டின் போது தமிழக நிதிநிலைமை குறித்தும், வறட்சி குறித்தும் விரிவாக ஜெயலலிதாவிளக்கவுள்ளார். காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா விவசாயிகளும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் அவர் விளக்குவார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,000 கோடியை ஒதுக்க வேண்டும்என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கேட்டுக் கொள்வார்.
இந்த முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் டெல்லி செல்கிறார்.ஆனால் அவரை நேருக்கு நேர் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்ப்பார் என்றே கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 24ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமரைத் தனியாகச் சந்திக்கவுள்ள ஜெயலலிதா காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிடவலியுறுத்த வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்வார். இதையடுத்து அன்று மாலையே ஜெயலலிதாசென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம்நடைபெற்றது. காவிரி விவகாரம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் கூட்டத்திற்குப்பின்னர் அதுகுறித்து அரசு அறிக்கை எதுவும் தரவில்லை. ஜெயலலிதாவும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை.