காவிரி விவகாரம்: சோனியாவுடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு
பெங்களூர்:
நீதிமன்றத்தை அவமதித்த கர்நாடகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்குவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளதால் தண்டனையில்இருந்து தப்ப ஒரு விளக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று தனது கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா டெல்லியில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.
முன்னதாக அவர் தனது மூத்த அமைச்சரவை சகாக்களை டெல்லிக்கு வரவழைத்து அங்கேயே விவாதித்தார்.
தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலான டிவிஷன்பெஞ்ச் நேற்று மனுவை விசாரித்தபோதே கர்நாடகத்துக்கு கடுமையாக டோஸ் விட்டனர்.
தமிழகத்துக்கு வேண்டுமென்றே தண்ணீர் விடவில்லை என்றும், திட்டமிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கைபராமரிக்க முடியாவிட்டால் ஆட்சியில் இருக்கவே லாயக்கில்லை எனவும் கிருஷ்ணா அரசு குறித்து மிகக் கடுமையான கருத்துக்களைத்தெரிவித்தனர்.
இதில் ஏதாவது சமரசத் திட்டத்துக்கு கர்நாடகம் தயாராக இருந்தால் அதை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினர்.
மேலும் உடனே தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆனால், இதுவரை கர்நாடகம் தண்ணீர் விடவில்லை.
இன்று மாண்டியாவில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூடி விவாதித்தனர். அணைக் கட்டுகளில் ஆயிரக்கணக்கில் கூடுவது எனவும்,தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதை எக் காரணம் கொண்டும் தடுப்பது எனவும் அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுகளில் 24 நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தனது உத்தரவை மீறி வரும் கர்நாடகத்துக்கு எதிராக வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் உச்ச நீதிமன்றம்கடுமையான தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விளக்கமளிக்கும் மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடகம் திட்டமிட்டுள்ளதாக சட்ட அமைச்சர் சந்திரேகெளடா தெரிவித்தார்.
நீதிபதிகளின் எச்சரிக்கையயடுத்து டெல்லியில் முகம் செத்துப் போன நிலையில் இருந்த சந்திரே கெளடா திக்கித் திணறிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களால் ஏன் தண்ணீர் விட முடியவில்லை என்பதை நீதிபதிகளுக்கு விளக்கம் வகையில் ஒரு மனுவை தாக்கல் செய்வோம்.
மாண்டியாவில் நடந்த போராட்டங்கள், 18ம் தேதி விவசாயி தற்கொலை செய்து கொண்டது, அதையடுத்து நீர் நிறுத்தப்பட்டது போன்றவிவரங்களை நீதிமன்றத்திடம் விளக்குவோம்.
விவசாயிகள் போராட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வோம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்றார் சந்திரே கெளடா.
முதலில் இன்றே பெங்களூர் திரும்பி அவசரமா அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த கிருஷ்ணா திட்டமிட்டிருந்தார். ஆனால், சோனியாவைசந்திக்கத் திட்டமிட்டதால் இன்று காலை மூத்த அமைச்சர்களை டெல்லிக்கு வரவழைத்து அவர்களுடன் பேசினார்.
அவர் இன்று இரவு பெங்களூர் திரும்புவார் என்று தெரிகிறது. இதனால் இன்று பெங்களூரில் நடக்க இருந்த அமைச்சரவைக்கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-->