நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவு?
டெல்லி:
நாட்டின் நதிகளை இணைப்பது குறித்து விரைவில் பிரதமர் வாஜ்பாய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என துணைப் பிரதமர்அத்வானி கூறினார்.
டெல்லியில் பா.ஜ.க. மகளிர் அணியின் கூட்டத்தில் பேசிய அத்வானி,
தேசிய நதிகளை இணைத்து வெள்ளத்தையும் வறட்சியையும் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில்வெளியாகும். 30 ஆண்டுகளுக்கு முன் பாசன அமைச்சராக இருந்த கே.எல். ராவ் தான் நதிகள் இணைப்பு என்ற கனவுத் திட்டம் குறித்துமுதலில் பேசினார்.
1980ம் ஆண்டில் இருந்தே இந்தத் திட்டம் குறித்து பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளை எங்கள் அரசு இப்போதுபரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம். நதிகள் இணைப்பு குறித்த முக்கியமானஅறிவிப்பை வாஜ்பாய் விரைவில் வெளியிட உள்ளார் என்றார் அத்வானி.
நதிகளை இணைக்க விரைவு செயல் குழுவை அமைத்து இந்தப் பணியை 2012 ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ள நிலையில் அத்வானி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்மூலம் நதிகளை இணைக்கும் பணியைத் துவங்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.