இலங்கை நீதிமன்றத்தின் கடும் தீர்ப்புக்கு இடையே அமைதி பேச்சு தொடர்கிறது
நாகோம் பதோம் (தாய்லாந்து):
புலிகள்- அரசுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளை எட்டியது.
இந் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.
தாய்லாந்தின் நகோம் பதோம் நகர ஓய்வு விடுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இலங்கையில் சென்ட்ரல் பாங்க் கட்டத்தை குண்டுகள் நிரப்பிய லாரியைக் கொண்டு புலிகள் தாக்கி அழித்த வழக்கில் பிரபாகரனுக்கு 200ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அந்தத் தாக்குதலில் 91 பேர் இறந்தனர். 300 பேர்படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனால், இந்தத் தீர்ப்பு குறித்து புலிகள் தரப்பில் கோபம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிப்படையாக எந்தக் கருத்தும்தெரிவிக்காத ஆண்டன் பாலசிங்கம் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கை அரசுப் பிரதிநிதிகளிடம் தங்களதுகோபத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று நடந்த பேச்சுவார்த்தையில், வட கிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சீரமைக்க கூட்டுக் குழுக்களைஅமைக்கவும், இதற்காக வெளிநாட்டு நிதியுதவியைக் கோரவும் இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கமிட்டிகளில் முஸ்லீம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கை மறு சீரமைப்புக்கும் குடிபெயர்ந்த தமிழர்களை மீண்டும் வட கிழக்குப் பகுதியில் குடியமர்த்தவும் தேவைப்படும்நிதியைத் திரட்ட வரும் 25ம் தேதி ஓஸ்லோவில் நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை நடத்த நார்வே முடிவு செய்துள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தைகளில் வடகிழக்கு இலங்கையில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் இரு தரப்பினருக்கும்இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என ஆண்டன் பாலசிங்கம்தெரிவித்ததாக அரசுப் பிரதிநிதிகள் கூறினர்.