சந்திரிகாவிடமிருந்து தேச பாதுகாப்பு பொறுப்பை பறிக்க முடிவு
கொழும்பு:
என்னிடம் இருந்து நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பைப் பறித்துவிட்டு, எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புபோன்ற உப்புக்குச் சப்பாணிப் பொறுப்பை வழங்க இலங்கை அரசு முயல்கிறது என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில் சந்திரிகா இந்தப் புகாரைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சந்திரிகா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பாதுகாப்பு அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் புதிய தேசிய பாதுகாப்புக் கமிட்டியை அமைக்க பிரதமர் ரணில் முயற்சி செய்துவருகிறார். இந்தக் கமிட்டியிடம் முக்கிய பாதுகாப்புப் பொறுப்புக்களை வழங்க முடிவு செய்துள்ளார்.
அதே நேரத்தில் எனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாப்புக் கமிட்டிக்கு எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல்பாதுகாப்பு, இயற்கைச் சீற்ற நிவாரணம் ஆகிய பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை மட்டும் தர ரணில் முடிவுசெய்துள்ளார்
.இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பில் அதிபரான எனது அதிகாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பறிக்க முயற்சி நடக்கிறது.இது உலக மரபுகளுக்கு எதிரானது.
முப்படைகளின் கூட்டுத் தளபதி என்ற புதிய பொறுப்பை உருவாக்கி அவருக்கு முழு அதிகாரத்தைத் தந்துவிட்டு என்னைடம்மியாக்கத் திட்டமிடுகிறார்கள். இந்த கூட்டுத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் தான் உத்தரவிட முடியும்.
இதன் மூலம் நாட்டின் ராணுவத்திலும், பாதுகாப்பிலும் பெரும் பிரச்சனைகள் வரும். இது அரசியல் சட்டத்தையும் வீரர்களின் மனபலத்தையும் குலைத்துவிடும்.
அரசின் இந்தத் திட்டம் குறித்து நான் கேட்டபோது அது குறித்து இதுவரை எங்களுக்கு ஏதும் தெரியாது என பிரதமரும்பாதுகாப்பு அமைச்சரும் பதில் தந்தனர். பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல் இந்த அரசாங்கத்தில் வேறுயாராவது முக்கிய முடிவுகளை எடுக்கிறார்களோ என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டுள்ளது என சந்திரிகா தனது அறிக்கையில்கூறியுள்ளார்.
புலிகளுடனான பேச்சுக்கு ஒத்துழைக்காமை, அரசின் முயற்சிகளுக்கு தடை போடுவது என சந்திரிகா தொடர்ந்து தனக்குத்தொல்லை தந்து வந்ததால் தான் அவரது அதிகாரத்தைப் பறிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திட்டமிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவால் ரணிலால் சந்திரிகாவின் அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரமுடியவில்லை. இதனால் மறைமுகமாக அவரது அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சிகளில் ரணில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு படியாகத் தான் புதிய பாதுகாப்புக் கமிட்டியை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தையின் 3வது நாள் ஆலோசனைகள் இன்று தொடங்கின.
தாய்லாந்தில் நகோம் பதாமில் நடக்கும் இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நாளையுடன் முடிவடைகின்றன.